(அகமட் எஸ். முகைடீன்)
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான முத்திரை வரியினை துரிதமாக
பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் குறித்த ஆராயும் மாகாண மட்டக் கூட்டம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல், உள்ளுராட்சி, கிராமிய
அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில்
முதலமைச்சர் செயலகத்தில் நேற்று (28) நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்தின் பணிப்புரைக்கு அமைவாக ஆசிய
மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கல்முனை மாநகர முதல்வர்
கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர்
எஸ்.உதயகுமார், மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி எஸ்.குமரகுரு, மாகாண
இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட
உள்ளுராட்சி திணைக்கள உதவி ஆணையாளர்கள், ஆசிய மன்ற சிரேஷ்ட தொழில்நுட்ப
ஆலோசகர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத்,
கல்முனை மற்றும் மட்டக்களப்பு காணிப் பதிவாளர்கள், கல்முனை மற்றும்
மட்டக்களப்பு மாநகர சபைகளின் கணக்காளர்கள், அக்கரைப்பற்று மாநகர சபை
ஆணையாளர் ஏ.ஆர்.எம்.அஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முத்திரை வரிகளை உள்ளுராட்;சி மன்றங்கள் இலகுவாக பெறும் பொருட்டு இதுவரை
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலின் நோக்கம்
குறித்தும் ஆசிய மன்றத்தின் நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர்
எம்.ஐ.எம்.வலீத்தினால் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது உள்ளுராட்சி மன்றங்களுக்கு முத்திரை வரியினை வழங்குவது தொடர்பான
கடந்த கால செயற்பாட்டு மீளாய்வு, தற்போதைய வரி அறவீட்டு நிலைமை, எதிர்கால
நடவடிக்கைகள் மற்றும் முத்திரை வரியினை வழங்குவதிலுள்ள தாமதங்கள் தொடர்பில்
கலந்துரையாடப்பட்டது. உள்ளுராட்சி மன்றங்களுக்கு இவ்வருடம் டிசம்பர்
மாதத்திற்கு முன்னதாக 2011ம் ஆண்டுவரை நிலுவையாக உள்ள முத்திரை வரிகளை
வழங்க முடியும் என இறைவரி திணைக்கள அதிகாரிகாளினால் இங்கு
தெரிவிக்கப்பட்டது.
காணிப் பதிவுகளை மேற் கொள்கின்றபோது உண்மைப் பெறுமானத்தை காண்பிக்காது
குறைந்த பெறுமானமுடையதாக காண்பிக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்படுவதனால்
உள்ளுராட்சி மன்றங்களுக்கு வரவேண்டிய அதிகளவான வருமானங்கள் இழக்கப்படுவதாக
இங்கு கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் சுட்டிக்காட்டினார். இதனை
நிவர்த்தி செய்ய தேவையான வழிவகைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார்.
அத்தோடு மாநகர சபையின் சீரான செயற்பாட்டிற்கு முத்திரை வரி வருமானம் பாரிய
பங்களிப்பினை செய்வதனால் அவற்றை விரைவாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.


Post a Comment