
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவதற்கு ஆதரவான பிரேரணை கிழக்கு மாகாண சபையில 15 மேலதிக வாக்குகளினால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டே அந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இந்த தனி நபர் பிரேரணையை அவர் ஜூலை 23 ஆம் திகதி சமர்ப்பித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் இன்று விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதுடன் வாக்கெடுப்பு நடத்துமாறும் கோரிநின்றார்.
வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முதலமைச்சர் தனது கடுமையான எதிர்ப்பை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தார். மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என பலத்த குரலில் முதலமைச்சர் மீது வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கடைசியில் ஒன்றுமே செய்ய முடியாத நிலையி்ல் தவிசாளரினால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
அதன்பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரியந்த பத்திரண எதிராக வாக்களித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
எனினும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர் உதுமாலெப்பை, எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஆரிப் சம்சுதீன், ஏ.அமீர், எம்.எஸ்.சுபையிர், சிப்லி ஆகியோர் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, மேற்படி முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டது இந்த சமூகத்திற்குச் செய்த பாரிய துரோகமாகும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்திற்கான கட்சி என்பதை நிருபித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் ஆகியோர் தெரிவித்தனர்.
Post a Comment