கிழக்கு மாகாண சபையின் மாகாண அபிவிருத்தி அரங்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டம் நேற்று அக்கரைப்பற்று ரீ.எப்.சீ. மண்டபத்தில் கிழக்கு மாகாண முதல்வர் நஜீப் ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினர்.
இதில் சில விடயங்களக்கு உடன் தீர்வு காணப்பட்டதடன் பல விடயங்கள் சபையில் ஆராயப்பட்டு தீர்வினை பெற்றுத் தருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்தார்.
சமச்சீரான நிலைப்பேறுடைய அபிவிருத்திக்கு பொருத்தப்பாடுடைய நிகழ்ச்சித் திட்டங்களை நெறிப்படுத்துவதற்குமான தேவையினைக் கருதி மக்களினது அபிலாஷைகள் மற்றும் புதிய சிந்தனைகளை உள்வாங்கி மாகாண நிகழ்ச்சித் திட்டங்களாக மாற்றுவதற்கு வசதியாக மாகாண அபிவிருத்தி அரங்கங்களை நடாத்துவதற்கு அமைச்சர் வாரியம் தீர்மானித்திருந்தது.
அரசியல் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள் போன்றோர் மாகாண திணைக்கள தலைவர்களுடன் கொள்ககை ரீதியான தீர்மானங்கள் மற்றும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சித் திட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை முழுமையாகக் கொண்டு வருவதுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சமூகங்களினதும் நன்மையை நோக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயற்படுகின்ற ஒரு சுமூகமான சூழலை உருவாக்கும் வகையில் மேற்படி கூட்டம் நடைபெற்றது.
இங்கு அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் மாநகர, நகர, பிரதேச சபைகளின் தலைவர்களினால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கல்முனை மாநகர சபை கட்டிடமானது 1953ம் ஆண்டு கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் காலப் பகுதியில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுகிறது. எனவே இதற்கான நிர்வாக கட்டிட நிர்மானம் தொடர்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத் திட்ட நிதி ஒதுக்கீடுகளில் நிதி ஒதுக்கப்படாமை தொடர்பில் முதல்வர் சிராஸ் மீராசாஹிபினால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்டுகின்ற பி.எஸ்.டி.ஜி நிதியின் அளவு மக்கள் பரம்பலுக்கு அமைவாக வழங்கப்படுவதில்லை என்பதனால் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கிராமங்களிற்கு பங்கிடுவதில் பிரச்சினைகள் நிலவுகின்றது. இதனால் அந்நிதியின் அளவை அதிகரிக்குமாறும் முதல்வர் சிராஸ் மீராசாஹிபினால் கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.







Post a Comment