
கடந்த, 1987ல் நிறைவேற்றப்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
அதை வேடிக்கை பார்க்காமல் மத்திய அரசு தலையிட வேண்டும் என டில்லியில் நடந்த மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
டில்லியில் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் தொடர்பான மாநாடு ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன,
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முழுமையாக இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு இணைத்த பிறகே, அங்கு தேர்தல்களை நடத்த வேண்டும்.
நிலம், பாதுகாப்பு, கல்வி போன்றவை தொடர்பான உரிமைகளில், தமிழர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
இந்த அதிகாரங்கள் எல்லாம், மாநில அரசுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழர்களின் நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்துக் கொள்வதும், தமிழர்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொள்வதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை, இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழை ஆட்சி மொழி அந்தஸ்தில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளையும், மாகாண சபை அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்.
கடந்த, 1987ல், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, 13வது சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு மதிக்காமல் நடந்து வருகிறது. இதை, இந்தியா கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது.
அந்த ஒப்பந்தம் ஏற்பட இந்தியாவே காரணம். எனவே இந்தியாவே தலையிட்டு அந்த ஒப்பந்தத்தை காப்பாற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானங்களின் நகல்களை, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் வழங்குவது என்றும், மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.
Post a Comment