அரசியலில் பிச்சைப் பாத்திரம் ஏந்திய போது முஸ்லிம் காங்கிரஸால் போடப்பட்ட
எம்.பி. பதவியை எடுத்து பாராளுமன்ற படிக்கட்டுகளை மிதித்தவர்கள் பின்பு
அரசுக்கு கூஜாதூக்கி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம்
காங்கிரஸுக்கும் சமூகத்துக்கும் துரோகம் செய்கின்றனர் என அக்கரைப்பற்று
மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று
அமைப்பாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எம். எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.
புத்தளம் கரைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து
கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர்
தொடர்ந்து உரையாற்றுகையில்,
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற ரிசாத், ஹிஸ்புல்லாஹ்,
அதாவுல்லாஹ் போன்றவர்கள் அவர்களுக்குள்ளே ஒற்றுமைப்படாதவர்களாகி
விட்டார்கள். உண்மையில் இவர்கள் சமூக நலன் கருதி பிரிந்து சென்றிருந்தால்
அவர்களுக்குள்ளே ஒற்றுமையையும் இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தியிருப்பார்கள்.
தேசிய முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என
முஸ்லிம்களுக்கான கட்சி தொடங்கியதாகச் சொன்னவர்கள் யுத்த வெற்றியில்
2009ஆம் ஆண்டு பேரினவாதம் உச்சத்தில் இருந்த போது ஆட்சியாளர்களின் ஆணையை
ஏற்று தங்களது கட்சிகளை முஸ்லிம் சமூகத்திலிருந்து விடுவித்துக் கொண்டு
கட்சிகளின் பெயர்களை தேசிய காங்கிரஸ் என்றும் அகில இலங்கை மக்கள் கட்சி
என்றும் மாற்றிக் கொண்டார்கள்.
தங்கள் கட்சியின் பெயரில் முஸ்லிம் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளத்
தைரியமற்றவர்களா சமூகத்தின் நலன் கருதி குரல் கொடுக்கப் போகிறார்கள்
என்றார்.
Post a Comment