கொழும்பு:
கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது பௌத்தசிங்கள இனவாத கும்பல் ஒன்று
சுற்றிவளைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இச் சம்பவமானது கண்டிக்க
தக்கதும் இது குறித்து இலங்கை அரசை பொறுப்புக் கூறும் வகையில் தூதரகங்கள்
செயற்பட வேண்டும். என ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச
இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயீஸ் வஹாப்தீன் முஸ்லிம்
நாடுகளின் தூதரகங்களுக்கு எழுதிய கடிதத்தில் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஒரு சில இனவாதிகளினால் தொடச்சியாக
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து
விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒன்றாக
கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது நேற்று இரவு இனம் தெரியாத காடையர்களினால் மிக
மோசமான முறையில் தாக்கப்பட்டது.
மஹ்ரிப் தொழுகைக்காக தயாராகிக் கொண்டிருந்த போது இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு முஸ்லிம்களும் அவர்களின் வியாபார
நிலையங்களும் முஸ்லிம் வணக்கஸ் தலங்களும் தாக்கப்படுவது அடிப்படை உருமை
மீறலாக காணப்படுகிறது.
இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு நாடு
என்றவகையில் ஒரு இலங்கை பிரஜை தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கும்
தான் சார்ந்த மத அனுஸ்டானங்களை மேற் கொள்வதற்கும் உருமை உடையவனாக
காணப்படுகின்றான். இது இவ்வாறு இருக்கும் போது ஒரு தனிப்பட்ட குழு இவ்வாறான
இன அடக்கு முறைகளையும் இன பயங்கரவாதத்தையும் தோற்றுவிப்பதை ஒரு போதும்
சகித்துக் கொண்டு பார்வையாளர்களாக இருந்து விட முடியாது.
இவ்வாறானவர்களின் செயற்பாடு புரையோடிப்போய்
பூகம்பமாய் வெடிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு இதற்கு
முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இதற்கு இஸ்லாமிய நாடுகளின் தூதரகங்கள்
வலியுறுத்த வேண்டும்
இஸ்லாமியர்கள் ஒருபோதும் பிற மதத்தவர்களை தூசித்தது கிடையாது. அவர்கள் அவர்களின் பாட்டில் மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
புரையோடிப்போய் இருந்த யுத்த நிறைவின்
பின்னர் சகல மதத்தவர்களும் இலங்கையர்கள் என்ற வாஞ்சையோடு ஒற்றுமையாக
உறவாடிக் கொண்டிருக்கும் போது அவற்றிற்கு குந்தகம் விளைவித்து நாட்டில்
நிலவும் சமாதான சூழலை இல்லாதொளிக்கும் செயலாகவே இவ்வின வெறியர்களின்
செயற்பாடுகள் காணப்படுகின்றன.
மக்கள் நிம்மதியாக பள்ளிவாசல்களில் வணக்க
வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல் திறக்கப்பட்டு
பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தபட்டு மக்கள் வழமை போன்று வணக்க வழிபாடுகளில்
ஈடுபட ஆவண செய்வதற்கான நடவடிக்கையினை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மேற்கொள்ள
உரிய நடவடிக்கை எடுக்குமாரும் அவர் கேட்டுக் கொண்டார்.

Post a Comment