கிழக்கு மாகாண சபை ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் முரண்பட்டுள்ள நிலையில் மாகாண சபையின் அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சரவையை நியமிப்பதா அல்லது கலைத்து விட்டு தோ்தல் ஒன்றை நடத்துவதா என்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பிரச்சினை தொடர்பாக முன்னாள் முதலமைச்சா் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையினான குழுவினா் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அறிய முடிகின்றது.
அதேவேளை நேற்றிரவு நடத்தப்பட்ட உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றில் கிழக்கு மாகாண சபை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தமிழத் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைத்தால் மாகாண சபையை கலைக்கப்பது எனவும் ஜனாதிபதி ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மாற்றியமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் மெட்ரோ மிரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபை ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் முரண்படும் அளவுக்கு சூடு கிளப்பிய மாகாண கல்வி, காணி அமைச்சரான விமலவீர திசாநாயக்கவை அப்பதவியில் இருந்து நீக்கி விட ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுக்கு கல்வி அமைச்சையும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அரச தரப்பு சிங்கள உறுப்பினரான வீரசிங்கத்தை காணி அமைச்சராகவும் நியமிக்க மாகாண ஆளுநருடன் ஜனாதிபதி ஆலோசித்துள்ளதாக மெட்ரோ மிரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment