(NF) வெளிநாடு செல்லும் பெண்களுக்காக புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் முதல்
அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம், பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள உத்தியோகத்தர் மூலம்
வெளிநாட்டிற்குச் செல்வோரின் குடும்ப நிலைமை மற்றும் பிள்ளைகளின்
பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளுதல்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறித்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரின் கையொப்பம்
இருப்பது கட்டாயமானது என பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய
குறிப்பிட்டார்.
வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இந்த அறிக்கையை
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர்
தெரிவித்தார்.
தாய்மார் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் செல்வதனால் அவர்களது பிள்ளைகளும்
குடும்பமும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது கண்டறியப்பட்டுள்ளதாக அவர்
கூறினார்.
இந்த அறிக்கையின் மூலம் குறித்த பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குத்
தகுதியானவரா, தொழில்வாய்ப்புத் தொடர்பில் அவரது கணவரின் விருப்பம் உள்ளதா
மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து அறிந்துகொள்ள முடியுமென
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் கூறினார்.

Post a Comment