Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

'சிங்கள பெருந்தேசியவாத சக்திகள் ஜனாதிபதியை ஒருபக்கம் இழுத்துசெல்ல முயற்சி'

Monday, June 240 comments




தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களில்லாத நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பத்தன்மையை ஏற்படுத்தாது' என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிளைக் காரியாலயமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறுகையில், 'சிங்கள பெருந்தேசியவாத சக்திகள் ஜனாதிபதியை ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு செல்ல முற்படுகின்றனர். இவ்வாறான சிறு சிறு குழுக்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் அஞ்சமாட்டார் என நம்புகின்றோம். இவ்வாறான சக்திகளுக்கு எதிராக ஜனாதிபதி காட்டமான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 
'நியாயத்தை பேசுகின்ற கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லாவிடில் நம்பகத்தன்மை இருக்காது.  யுத்தமில்லாத சூழ்நிலையில் மக்களின் அன்றாட சிவில் நடவடிக்கையில் இராணுவம் தலையிடுவதானது பாரிய அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 
இது மக்களின் அன்றாட ஜீவனோபாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது இதற்கு முடிவு காணப்படல் வேண்டும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து ஒரு துண்டுப்பிரசுரம் வந்தால் போதும் அப்பிரதேசங்களிலுள்ள உலமாக்கள் இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்டு யார் துண்டுப்பிரசுரம் வெளியிட்டார்கள் என விசாரிக்கப்படுகின்றனர்.
யுத்தமில்லாத சூழ்நிலையில் முகாம்களுக்குள் இருக்க வேண்டிய இராணுவத்தினர், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையீடு செய்து வருகின்றனர். சிவில் நிருவாக நடவடிக்கையில் கடமையாற்ற வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கே உண்டு' என்று அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். 
'நாவலடியில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கான என்ன தேவை தற்போதுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் தற்போதைய நிலை தொடர்பாக ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறவிருக்கின்றேன்.
ஜும் ஆ தொழுகைகளின் போது பள்ளிவாயலுக்கு வெளியே இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். போலிஸாரே சிவில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பொலிஸாரினால் முடியாமல் போனால் மாத்திரமே இராணுவத்தினரை பொலிஸார் அழைப்பார்கள்.
ஒரு சிவில் நடைமுறை நடைபெறும் நாடொன்றில் இவ்வாறான நடவடிக்கை நல்லதல்ல. பொதுமக்களின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் இராணுவம் தலையிடுவதை நிறுத்த வேண்டும். பொதுமக்களையும் உலமாக்களையும் இராணுவம் முகாம்களுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார். 
'அரபுப் புரட்சி இணைய தொடர்பு சாதனங்களின் மூலம் ஏற்பட்டுவிடுமோ எனும் பயத்தில் இவ்வாறான முஸ்த்தீபுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன. பேஷ்புக் பயம் இவர்களுக்குள்ளது.
முஸ்லிம்கள் ஒரு போதும் ஆயுதம் ஏந்த மாட்டார்கள். ஆயுதங்களில் முஸ்லிம்கள் விருப்பமானவர்களுமல்ல, முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் முஸ்லிம்களின் அரசியல் விடுதலை இயக்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவானது.
இதை பேசுவதற்குரிய தைரியம் மன வலிமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு மாத்திரமே உண்டு. இறைவனின் உதவியினால் மக்கள் இதற்கான ஆணையைத் தந்துள்ளார்கள். சர்வதேச சதிவலையில் ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிக்காது. யாருடைய முகவர்களாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்காது' என்றார். 
'சொந்தக்காலில் நின்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்து வருகின்றது. தாய்மாரின் பிரார்த்தனையும் கண்ணீரும் இந்த கட்சியினை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் யாருடைய வெளிநாட்டு சக்திகளுக்கும் அடிமைப்பட்டு அல்லது அவர்களின் முகவர்களாக இருந்து செயற்படாது' என அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார். 
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by