வடமாகாணத்தில் காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ முன்வருமாறும்
தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று கடிதம் ஒன்றை
அனுப்பிவைத்துள்ளார்.
காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினையால் வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ்,
முஸ்லிம் இரு சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில்
சுட்டிக்காட்டியுள்ள அசாத் சாலி இது தொடர்பான தீர்வுக்கு ஒன்றிணைந்து
செயற்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த நாட்டில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கிவரும்
பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எந்தவொரு
பிரச்சினைக்கும் ஆட்சியாளர்களிடம் உரிய தீர்வு இருப்பதாகவும் தெரியவில்லை.
இவ்வாறான ஒரு சூழலில் அண்மைக்காலங்களாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்
மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றான காணி அபகரிப்பு
பிரச்சினைக்கு அந்த மக்கள் சார்பாக, தங்களது கட்சி மேற்கொண்டுள்ள சட்ட
நடவடிக்கை ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் போன்றே முஸ்லிம் மக்களும் இந்த
காணி அபகரிப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விடயத்தில் யாரும் அவர்களுக்கு இதுவரை உதவ
முன்வந்ததாகத் தெரியவில்லை.
நீங்கள் மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கையில் முஸ்லிம்களோடு தொடர்புபட்ட காணி
அபகரிப்பு விடயங்களையும் இணைத்துக் கொண்டு இரண்டு சமூகங்களும்
எதிர்நோக்கியுள்ள பொதுவான பிரச்சினையாக முன்னெடுத்துச் சென்றால் அது மேலும்
வலுவுடையதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இந்த விடயத்தில் தேவை ஏற்படும் பட்சத்தில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம்
செய்யும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பேசி அவர்களையும் இணங்கச் செய்து
இந்த நடவடிக்கையில் ஈடுபடலாம். அதற்குத் தேவையான சில முன்னேற்பாட்டு
நடவடிக்கைகளில் ஈடுபடவும் நாம் தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய பொதுவான விடயங்களில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து
செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்பதை ஏற்கனவே பல இடங்களில்
நீங்கள் வலியுறுத்தி உள்ளீர்கள். அந்த வகையிலேயே நான் மேற்படி விடயத்தை
உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
நீங்கள் சம்மதிக்கும் பட்சத்தில் ஒரு கட்சி என்ற வகையில் இந்த விடயத்தில்
சில ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள அர்ப்பணிப்புடன் தயாராக உள்ளேன்
என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Post a Comment